×

சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசப்பேச்சு… போலீசாருக்கு சவால் : தலைமறைவாக இருந்த யூ-டியூபர் ‘பப்ஜி மதன்’ கைது!

தருமபுரி : யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த பப்ஜி மதனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.இந்திய ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டான ‘பப்ஜி’யை, சேலத்தை சேர்ந்த மதன்(எ) பப்ஜி மதன் என்பவர் தனது யூடியூப் சேனல் மூலம் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம் 8 லட்சம் வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தியுள்ளார். அவருடன் ஆன்லைனில் விளையாடும்போது சிறுவர்கள் மற்றும் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசி தனது யூடியூப் சேனலில் பதிவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்கள் சேலம், திருச்சி, சென்னை என தமிழகம் முழுவதும் மதன் மீது புகார் அளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் தொடர் புகார்களை தொடர்ந்து போலீசார் மதனை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மைகேல் என்பவர் யூடியூபர் மதன் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூடியூபர் மதன் மீதான விசாரணையை தொடங்கினர். அதேநேரம், மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் படி அந்தந்த மாவட்ட போலீசார் மதனை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். போலீசாரின் கைதில் இருந்து தப்பிக்க மதன் தலைமறைவாகிவிட்டான். அதேநேரம், காவல்துறைக்கு சவால் விடும் வகையில் மதன் வலைத்தளங்களில் ஆடியோ ஒன்றும் வெளியாகியது. அதைதொடர்ந்து தலைமறைவாக இருக்கும் மதனின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க போலீசார் பல வகையில் முயற்சி செய்தனர். ஆனால் அவனை கைது செய்ய முடியவில்லை.

அதைதொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் தனிப்படை சேலம் சென்று  மதன் நடத்திய யூடியூப் சேனலின் அட்மினாக (நிர்வாகி) உள்ள அவரது மனைவி கிருத்திகாவை அவரது 8 மாத குழந்தையுடன் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் பப்ஜி மதனுக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டப்பட்டன. அதில், அவரது மனைவி கிருத்திகாவும் அவருடன் சேர்ந்து பணியாற்றி வந்தது அம்பலமானது.

இதையடுத்து மதனை வலையில் சிக்க வைப்பதற்காக, போலீசார் மதனின் மனைவி கிருத்திகாவை கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட அதிரடி விசாரணையில், மதன் தருமபுரியில் இருப்பதாக துப்பு கிடைத்தது. அதன் படி, தருமபுரிக்கு விரைந்த போலீசார் தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை கைது செய்தனர்.தருமபுரியில் இருந்து இன்று மாலை சென்னைக்கு பப்ஜி மதன் அழைத்து வரப்படுகிறார். 


Tags : Pupji Dann , பப்ஜி மதன்
× RELATED மோடியின் சர்ச்சை பேச்சு விவகாரம்; போர்...