×

பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை: கனமழையால் பில்லூர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து, அணையிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் காரமடை அருகே, தமிழக - கேரள எல்லைப் பகுதியான, பில்லூர் வனப்பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணை, நீலகிரி மற்றும் கேரளக் காடுகளை நீர்ப்பிடிப்புப் பகுதியாகக் கொண்டுள்ள, பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இதன் மொத்தக் கொள்ளளவு 100 அடி ஆகும்.

கடந்த சில நாட்களாக, நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. தொடர் நீர்வரத்தால், பில்லூர் அணையிலும் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. இந்நிலையில், தென்மேற்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக, பில்லூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கி, அணையின் மொத்த நீர்த்தேக்க உயரமான 100 அடியில் நீர்மட்டம் 97 அடியை இன்று காலை கடந்தது.

அப்போதைய சூழலில், பில்லூர் அணைக்கு, விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர்வரத்து வந்துகொண்டு இருந்ததால், பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக விநாடிக்கு, 14 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரி நீராக பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதில் மின் உற்பத்திக்காக மட்டும் 6,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து தொடர்ச்சியாக உபரிநீர் வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றின் வேகம் அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால் பவானி ஆற்று கரையோரப் பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்களுக்கு கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



Tags : Bavani River ,Billar Dam , pillur dam
× RELATED பவானி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு: கொடிவேரி அணை மூடல்