சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் சந்தித்து பேசினார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் தலைமை செயலக வளாகத்தில் அற்புதம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தொற்று தொடர்பாக சிறை கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். எனது மகன் பேரறிவாளனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது. எனவே அவருக்கு சிறையில் இருந்து பரோல் விடுப்பு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.
எனது கோரிக்கையை உடனே ஏற்று அவருக்கு சிறையில் இருந்து 30 நாட்கள் பரோல் தந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். எனவே முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதற்காக இங்கு வந்தேன். மேலும் பேரறிவாளனுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவரை கேட்டுக் கொண்டேன். கண்டிப்பாக உதவி செய்கிறேன் என்று தெரிவித்தார். அதுதவிர, பேரறிவாளன் விஷயத்தில் நீங்கள் என்ன உணர்கிறீர்களோ? அதே உணர்வுதான் எனக்கும் உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.