தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே அட்டகாசம் செய்த ஒற்றை யானையை, வனத்துறையினர் நொகனூர் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.
தேன்கனிக்கோட்டை அருகே, நேற்று மாலை நொகனூர் வனப்பகுதியிலிருந்து வந்த ஒற்றை யானை தாவரக்கரை வழியாக ஒசட்டி, கேரட்டி, கண்டாகானப்பள்ளி, கெண்டிகானப்பள்ளி, மலசோனை ஆகிய கிராமங்களில் அட்டகாசம் செய்து சுற்றி திரிந்தது.
அங்கு விவசாயிகள் பயிரிட்டிருந்த தக்காளி, முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தது. அட்டகாசம் செய்த யானையை கிராம மக்கள் பட்டாசு வெடித்து விரட்டினர். ஆனாலும், யானை கிராம பகுதியில் சுற்றி வந்தது. இதனால், அச்சமடைந்த கிராம மக்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் சுகுமார் தலைமையில் வனத்துறையினர் ஒற்றை யானையை பட்டாசு வெடித்து நொகனூர் காட்டிற்குள் விரட்டியடித்தனர். இதனால், கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.