திருச்சி : திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட 15 வார்டுகளில் 66,200 குடியிருப்புகளில் 2,46,600 மக்கள் வசித்து வருகின்றனர். மேற்குறிப்பிட்ட வீடுகளில் உருவாகும் 116 டன் குப்பைகள் 57 வண்டிகள் மற்றும் 180 தள்ளுவண்டிகள் வாயிலாக சேகரிக்கப்பட்டு 9 நுண்ணுயிர் கூடங்களில் உரமாக்கப்பட்டு வருகிறது. வார்டு பகுதிகளில் உள்ள குப்பைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வார நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆணையிட்டுள்ளார்.
இதையடுத்து, வார்டு எண்.53, 60 ஆகிய வார்டுகளில் மெகா கூட்டு சிறப்பு துப்புரவுப்பணி நடைபெற்றுவருகிறது. வார்டு எண்.53க்குட்பட்ட கொடாப்பு, வ.உ.சி தெரு பகுதியில் நடைபெற்று வரும் தூய்மைப்பணி, மழைநீர்வடிகால் தூர்வாரும் பணிகளை அமைச்சர் நேரு நேரடி களஆய்வு செய்தபோது கொடாப்பு குளத்தை தூர்வாரி அதனைச் சுற்றிலும் நடைபாதை அமைக்குமாறும், வ.உ.சி தெருவில் சாலையினை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறும் அறிவுறுத்தினார்.
மேலும் கோ.அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட 15 வார்டுகளிலும் உள்ள 305 கி.மீ மழைநீர் வடிகால்களை, மழைக்காலம் தொடங்க இருப்பதால் போர்க்கால அடிப்படையில் தூர்வாரி சுத்தம் செய்யுமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து கோ.அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட மொத்தம் உள்ள 305 கி.மீ நீள மழைநீர் வடிகாலில் சுமார் 112 கி.மீ அளவிற்கு மழைநீர் வடிகால் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட மண்கழிவுகள் அகற்றப்பட்டதாகவும் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார். மீதமுள்ள 193கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் ஒருவார காலத்திற்குள் முடிக்குமாறு அமைச்சர் நேரு மாநகராட்சி ஆணையரை அறிவுறுத்தினார்.
Tags : Trichy Corporation ,Minister ,KN Nehru , Trichy: 2,46,600 people are living in 66,200 flats in 15 wards under Co. Abhishekpuram division of Trichy Corporation.