×

சரத்பவாரைத் தொடர்ந்து சந்திரசேகர ராவை சந்திக்கிறார் பிரசாந்த் கிஷோர் : பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகளை ஓரணியில் திரட்ட முயற்சி!!

டெல்லி : தேசிய அரசியலில் பாஜகவை வீழ்த்த மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தொடங்கி உள்ளார். மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து 3 மணி நேரம் பேசியுள்ளார் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர். இந்த சந்திப்பு தான் தற்போது தேசிய அரசியலில் பேசு பொருள். தேசியவாத காங்கிரஸின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், அதனை அக்கட்சி மறுத்துள்ளது.

மாறாக மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்க்க மாநில கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து இருவரும் பேசியதாகவும் தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 2014ம் ஆண்டு முதன்முறையாக மத்தியில் மெஜாரிட்டி உடன் அரியணை ஏறிய பாஜகவிற்கு அதற்கு பிறகு நடைபெற்ற பெரும்பாலான சட்டமன்ற தேர்தல்களில் மோடி அமித்ஷாவுக்கு வெற்றி மேல் வெற்றி தேடி தந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, புலம் பெயர் தொழிலாளர்களின் திண்டாட்டம், ஜிஎஸ்டி அமலாக்கத்தில் குளறுபடி என எந்த ஒரு நிர்வாக தோல்விகளும் தேர்தல் அரசியலில் பாஜகவுக்கு பின்னடைவை தரவில்லை. அடுத்தடுத்து வெற்றிகள் தந்த உற்சாகத்தால் காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்தை முன்னிறுத்தி பாஜக தீவிரமாக செயலாற்றியது. ஆனால் பாஜக ஒன்றும் வீழ்த்த முடியாத கட்சி அல்ல என்பதை புள்ளி விவரங்கள் மட்டுமல்ல பல சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் உறுதிப்படுத்துகின்றன. மாநில கட்சிகளை ஒருங்கிணைத்தால் பாஜகவை வீழ்த்த முடியும் என்பது பிரசாந்த் கிஷோரின் நம்பிக்கை.

இந்த நிலையில், சரத்பவாரை தொடர்ந்து தெலங்கானா முதல் சந்திர சேகர ராவை விரைவில் பிரசாந்த் கிஷோர் சந்திக்க இருப்பதாகவும் அவரது வியூகத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, உத்தரப் பிரதேசத்தின் அகிலேஷ் யாதவ் ஆகியரோடு பிரசாந்த் கிஷோர் பணியாற்றி உள்ளதால் மாநில அரசுகளின் கூட்டணி அவரால் சாத்தியம் ஆகும் என்றே கருதப்படுகிறது.

Tags : Prasanth Kishore ,Chandrasekara Rao ,Sarabjit ,BJP ,Orani , பிரசாந்த் கிஷோர்
× RELATED “சந்திரசேகர ராவ் ஆட்சியை தூக்கியெறிய...