சென்னை: கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து இன்று டாஸ்மாக், தேநீர், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கப்பட்டது. பூங்காக்களில் 3 மணி நேரம் வாக்கிங் செல்லலாம். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் நோய் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் உயிர்களைக் காக்கும் வகையில், முழு ஊரடங்கு இன்று காலை 6 மணி முதல் 21ம் தேதி காலை 6 மணி வரை, மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தொற்று அதிகமாக உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களை தவிர, இதர 27 மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அழகு நிலையம், சலூன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் நடைப்பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். அது மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் இன்று முதல் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.