சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர், ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் வெடித்து சிதறும்’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். மர்ம நபரின் பேச்சால் அதிர்ச்சியடைந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்படி சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வந்த, வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வந்த போலீசார் வீடு முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு மேல் சோதனை செய்தனர். இந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து விருகம்பாக்கம் போலீசார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்து காவல் கட்டுப்பட்டு அறைக்கு மர்ம நபர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.