×

வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சம் டீசல் விலையும் 100ஐ தாண்டியது: 7வது மாநிலமாக கர்நாடகாவில் பெட்ரோல் விலை சதம்

புதுடெல்லி: நாட்டில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலையும் லிட்டருக்கு 100ஐ தாண்டியது. 7வது மாநிலமாக கர்நாடகாவிலும் பெட்ரோல் விலை சதமடித்தது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. வாட் மற்றும் சரக்குக் கட்டணங்கள் போன்ற உள்ளூர் வரிகளை பொறுத்து எரிபொருள் விலைகள் மாநிலத்திற்கு மாநிலம்  வேறுபடுகின்றன. கடந்தாண்டு கொரோனா பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்தது. இதனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், அதில் மத்திய அரசு மண்ணை அள்ளி போட்டது. கலால் வரியை உயர்த்தி பொதுமக்களுக்கு பலன் எதுவும் கிடைக்காமல் செய்தது.

தினமும் மாற்றியமைக்கப்பட்டு வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை, சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல் காரணமாக ஒரு மாதம் காலம் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. தேர்தல் முடிந்ததும், பெட்ரொல் மற்றும் டீசல் விலையும் தினமும் உயர தொடங்கியது. கடந்த மே 4ம் தேதி முதல் 22 முறை பெட்ரோல் விலை உயர்ந்ததால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹100ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மெட்ரோ நகரங்களில் மும்பையில்தான் முதலில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹100ஐ தொட்டது. தமிழகத்தில் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் பெட்ரோல் விலை 100ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று 23வது முறையாக பெட்ரோல் லிட்டருக்கு 27 பைசாவும், டீசல் லிட்டருக்கு 23 பைசாவும் உயர்ந்தன.

இதனால், இதுவரை இல்லாத புதிய உச்சமாக பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலையும் 100ஐ தாண்டி மக்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் கங்காநகர் மாவட்டத்தில் தான் நாட்டிலேயே முதன் முறையாக பிப்ரவரி மத்தியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 தாண்டியது. இங்கு, தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 107.22 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர் விலை உயர்வால் இந்த பகுதியில்தான் டீசல் விலையும் புதிய உச்சத்தை நெருங்கி வந்தது. நேற்று ஏற்பட்ட விலை உயர்வால் வரலாற்றில் இல்லாத மோசமான சாதனையாக டீசல் விலை இந்த இடத்தில் சதத்தை அடித்தது. ஒரு லிட்டர் டீசல் 100.05க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் விலை உயர்வால் 7வது மாநிலமாக கர்நாடகாவும் சதத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பீதர், பெல்லாரி, கொப்பல், தாவணகரே, ஷிவ்மொக்கா, சிக்கமகளூர் ஆகிய பகுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹100ஐ தாண்டியது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பெட்ரோல் லிட்டர் 99.39, டீசல் 92.27க்கு விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் பெங்களூருவிலும் பெட்ரோல் விலை 100ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

காய்கறி, மருந்துகள் விலை உயரும் அபாயம்
பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல்  விலை வரலாற்றில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், அத்தியவாசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காய்கறி விலை எகிறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காய்கறிகளை அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருப்பதால் தமிழகத்தில் காய்கறி விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.  இதேபோல், வட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால், அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு லாரிகளில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் மருந்துகளின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் மட்டும் ஏன்?
ஒவ்வொரு மாநிலத்தில் விதிக்கப்படும் வாட் வரிக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்படுகிறது. அதன்படி, நாட்டிலேயே ராஜஸ்தானில் அதிகப்பட்ச வாட் வரி விதிக்கப்படுகிறது. இதனால்தான், இந்த மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலைகள் விரைவாக சதம் அடித்து வருகின்றன. இதற்கு அடுத்தப்படியாக மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வாட் வரி அதிகமாக வசூலிக்கப்படுகிறது.


Tags : Karnataka , Diesel prices hit new high of over 100
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...