ரோம்: யூரோ கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் துருக்கியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இத்தாலி வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது. ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த 24 நாடுகள் பங்கேற்கும் 16வது ‘யூரோ 2020’ கால்பந்து தொடர் நேற்று முன்தினம் இரவு இத்தாலியின் ரோம் நகரில் தொடங்கியது. ஏ பிரிவு முதல் ஆட்டத்தில் துருக்கி - இத்தாலி அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் 0-0 என சமநிலை வகித்தன. ஆனால் 2வது பாதியில் ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் இத்தாலி வீரர் டொமினிகோ பெரார்டி கோலை நோக்கி பந்தை உதைத்தார். அது துருக்கியின் தடுப்பு ஆட்டக்காரர் மெரிஹ் தெமிரா மீது பட்டு கோலுக்குள் புகுந்தது. அந்த சுய கோலால், இத்தாலி 1-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய அந்த அணிக்கு 66வது நிமிடத்தில் சிரோ இமோபில், 79வது நிமிடத்தில் லாரன்ஸ் இன்சிக்னே கோல் அடித்து அசத்தினர். தடுப்பு ஆட்டத்திலேயே கவனம் செலுத்திய துருக்கியால் கடைசி வரை கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபாரமாக வென்றது. அந்த அணியின் லியோனார்டோ ஸ்பினசோலா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இப்போட்டிக்கு 16 ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏ பிரிவில் இத்தாலி 3 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.