ஸ்ரீநகர்: காஷ்மீரில் அரசு நிகழ்ச்சியின்போது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீஸ் அதிகாரிகளுடன் பொதுமக்களில் இருவரும் பலியாகினர். ஜம்மு காஷ்மீரில் மக்களுடன் மக்களாக தீவிரவாதிகள் கலந்து இருப்பதால், அவர்களை உடனடியாக அடையாளம் காண்பதில் பாதுகாப்பு படைகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. மேலும், புதிது புதிதாக தீவிரவாதிகள் திடீரென உருவாவதும் பாதுகாப்பு படைகளுக்கு சவாலாக உள்ளது. இதுபோன்ற திடீரென முளைக்கும் தீவிரவாதிகள், சாதாரணமாக மக்கள் போல் சென்று சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், வடக்கு காஷ்மீரின் சோபூர் பகுதியில், நேற்று மதியம் அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய ரிசர்வ் காவல் படையுடன் உள்ளூர் போலீசார் இணைந்து அந்நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது, திடீரென உள்ளே புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். அவர்கள் மக்களுடன் கலந்து வந்து இந்த தாக்குதலைநடத்தினர். இதில், 2 போலீசாரும், பொதுமக்களில் 2 பேரும் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். அவர்கள் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடத்தி விட்டு தப்பிய தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் சுற்றி வளைத்துள்ளன.