புதுடெல்லி: வங்கிக்கு சென்று பணப் பரிமாற்றம் செய்வதை தவிர்ப்பதற்காக, ஏடிஎம் கார்டுகள் பயன்படுத்தப்படுகிறது. இதில் தற்போது, கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம்.களில் 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். இதர வங்கிகளின் ஏடிஎம்.மில் அந்தந்த வங்கிகளின் விதிமுறைகளுக்கு ஏற்ப 3 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். அதன் பிறகு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஏடிஎம்.களை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணத்தை உயர்த்திக் கொள்ள, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக வங்கிகளுக்கு அது அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஏடிஎம் பராமரிப்புச் செலவை ஈடு செய்வதற்காக, ஏடிஎம் கார்டு பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட ஏடிஎம்.மை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் தற்போதுள்ள ரூ.20க்கு பதிலாக ரூ.21 வசூலிக்கலாம். ஜனவரி 1, 2022ல் இது அமலுக்கு வரும்’ என்று கூறப்பட்டுள்ளது.