சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிக்கை: வடக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்குவங்க கடற்கரையை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவை கடக்கக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், ஓரிரு உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வடகடலோர மாவட்டங்களில் பொதுவாக மேகமூட்டத்துடனும் காணப்படும். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். இன்று முதல் 15ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இந்த தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.