சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் முடிந்தவுடன் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தலைமை கழகத்தில் நடத்துவதாக இருந்தது. வெகு விரைவில் ஊரடங்கு காலம் முடிந்தவுடன் அனைத்து மாவட்ட செயலாளர்களை தலைமை கழகத்திற்கு நேரில் அழைத்து ஆலோசனை நடத்த இருக்கிறோம். அதேபோல் தேர்தல் முடிந்த இந்த நேரத்திலும் மாவட்ட செயலாளர்களை நேரில் அழைத்து, இனி வரும் காலங்களில் தேமுதிகவை எப்படி வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதை நாம் அனைவரும் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். மேலும் வரும் காலத்தில் தேமுதிகவை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல நாம் அனைவரும் பாடுபட வேண்டும். சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்புவது, தலைமை கழகம் மீது களங்கம் விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். ஊரடங்கு முடிந்தவுடனோ அல்லது தமிழக அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றாவதோ மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தை விரைவில் நடத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எனவே, இந்த நேரத்தில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் உறுதியாக இருந்து கட்சியின் வளர்ச்சியை நோக்கி பயணிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.