×

தூத்துக்குடியில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கைது: இலங்கைக்கு தப்ப முயன்றவரை கியூபிரிவு போலீசார் மடக்கினர்

தூத்துக்குடி: இங்கிலாந்தைச் சேர்ந்த சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார். இலங்கைக்கு தப்ப முயன்ற போது கியூ பிரிவு போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். தூத்துக்குடி கடலோர பகுதியில் வெளிநாட்டு நபர் சுற்றித் திரிவதாக கியூ பிரிவு டிஎஸ்பி சந்திரகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் திரேஸ்புரம் அருகே முத்தரையர் காலனி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சுமார் 50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு நபர் ஒருவர் சுற்றிக் கொண்டிருந்தார். அவரை மடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் இங்கிலாந்தில் உள்ள லிட்டில்ஹாம்ப்டன் பகுதியைச் சேர்ந்த ஜோனாதன் தோர்ன் (47) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து இங்கிலாந்து மற்றும் இந்திய நாட்டின் பாஸ்போர்ட்கள், 2 ஐபோன்கள், ரூ.2 லட்சம், இலங்கை பணம் 2 ஆயிரம், ஐக்கிய அரபு நாடுகளின் பணம் திர்ஹம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஜோனாதன் தோர்ன் இந்தியாவில் வசிப்பதற்காக ஓவர்சீஸ் சிட்டிசன் ஆப் இந்தியா (ஓசிஐ) என்ற கார்டை பெற கோவாவில் மணிப்பூரை சேர்ந்த யாங்கரேலா வாஷூம் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

கடந்த 2018 ஜூன் மாதம் மும்பை, பரோடா மற்றும் கோவா போதை பொருட்கள் பறிமுதல் தொடர்பாக இந்திய தொழிலதிபர் உள்ளிட்ட 12 பேரை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில் இங்கிலாந்தை சேர்ந்த ஜோனாதன் தோர்ன் மற்றும் ஜான்பிரேஸ்கன், வியட்நாமை சேர்ந்த நஜிமன் கோங் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் கடந்த 2019 ஆகஸ்ட் வரை இவர் மும்பை சிறையில் இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து பரோலில் வந்துள்ளார். இவர் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என்றும் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு மாஸ்டர் மைண்டாக செயல்பட்டு, போதை பொருட்களை கைமாற்றி விடுவதில் கில்லாடியாக இருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த இருநாட்களுக்கு முன்னர் பெங்களூரு வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடிக்கு வந்துள்ளார். அவர் வந்த கார் எது என்றும் அவர் தூத்துக்குடியில் யாரை சந்தித்தார் என்பது குறித்தும் கியூ பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடியிலிருந்து திருட்டுத்தனமாக படகு மூலம் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இதற்காக அவர் படகு உரிமையாளர் ஒருவரை இடைத்தரகர் மூலம் சந்திக்க இருந்த நேரத்தில் தான் சிக்கியுள்ளார். அவரது விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து, தன்னை என்ன செய்தாலும் ஐபோன்களை ஓப்பன் செய்ய முடியாது என்று அசால்ட்டாக பதில் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

Tags : Thoothukudi , International drug trafficking gang leader arrested in Thoothukudi: Q-unit police repulse man trying to escape to Sri Lanka
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...