தர்மபுரி : ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தர்மபுரி மாவட்ட கிராமங்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நகராட்சி மற்றும் அனைத்து பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம், குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் பராமரிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை வகித்து பேசியதாவது:
தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் 100 வீடாக பிரித்து குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து நுண் உரக்கிடங்கில் சேர்க்க வேண்டும். மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்க வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்தவமனையில் மருத்துவ கழிவுகள் தவிர்த்து பிற கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். அத்தியாவசிய அனுமதிக்கப்பட்ட இனங்களை தவிர்த்து மற்ற கடைகள் செயல்படுவதை தடுத்து, அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைக்கு தொடர்பு கொள்ள நகராட்சி அலுவலர்கள், மருந்தகம் மற்றும் மளிகை பொருட்களின் தொடர்பு எண் குறித்த “விளம்பர பேனர்” வைக்க வேண்டும்.
மேலும் அரசின் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். நகராட்சி பராமரிப்பிலுள்ள பஞ்சப்பள்ளி நீரேற்று நிலையத்தில் இருந்து நகராட்சிக்கு குடிநீர் பெறும் வகையில் நகராட்சி ஆணையரும், பேரூராட்சி உதவி இயக்குனரும், துறை சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிராமங்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். இக்கூட்டத்தில் தர்மபுரி குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சங்கரன், கிருஷ்ணகிரி குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன், தர்மபுரி நகராட்சி ஆணையர் தாணுமூர்த்தி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கண்ணன், பேரூராட்சிகள் செயல் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.