சென்னை: 2 முறை தேசிய விருது பெற்ற வங்காள மொழி இயக்குனர் புத்ததேவ் தாஸ் குப்தா. பாக் பகதூர், தஹதர் கத, சரச்சார், உத்தாரா உள்ளிட்ட பல பெங்காலி படங்களை இயக்கியவர். 2000வது ஆண்டு உத்தாரா படத்திற்காகவும், 2005ம் ஆண்டு ஸ்வாப்னர் டின் என்ற படத்திற்காகவும் தேசிய விருது பெற்றார். 77 வயதான புத்ததேவ் தாஸ் குப்தா, சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். சிறுநீரக பிரச்னை காரணமாக டயாலசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்திருந்த நிலையில், நேற்று தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது. அவருக்கு பெங்காலி திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘மேற்கு வங்க திரையுலகிற்கு புத்ததேவ் தாஸ் குப்தாவின் மரணம் பேரிழப்பு’ என்று தெரிவித்துள்ளார்.