சென்னை: சென்னை பூக்கடை பகுதியில் உள்ள நகைக்கடையில் சோதனை நடத்துவது போல் நடித்து, 5 லட்சத்தை அபேஸ் செய்த 2 போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை பூக்கடை காவல் நிலைய போலீஸ்காரர்கள் முஜிப் ரகுமான், சுஜின் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு என்எஸ்சி போஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள ஒரு நகை கடையின் ஷட்டர் பாதியளவு திறந்திருந்தது. இதை பார்த்த போலீசார், ஷட்டரை திறந்து உள்ளே சென்றனர். அங்கு நகை கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பணம் எண்ணிக்கொண்டிருந்தனர். ஊரடங்கு காலத்தில் எப்படி கடையை திறக்கலாம், என கேட்டு பணத்தை எடுத்துக்கொண்டு காவல் நிலையம் வரும்படி போலீசார் கூறியுள்ளனர். இதுகுறித்து கடை உரிமையாளர், பூக்கடை காவல் நிலைய எஸ்ஜ கண்ணனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். அவர், கடைக்கு வந்த போலீஸ்காரர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.
இதன்பிறகு, நகை கடை உரிமையாளர் பணத்தை எண்ணி பார்த்தபோது 5 லட்சம் குறைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்தபோது, இரு போலீஸ்காரர்களும் பணத்தை எடுத்து பாக்கெட்டில் வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து பூக்கடை போலீசில் கடை உரிமையாளர் புகார் செய்தார். போலீஸ் அதிகாரிகள் இதுபற்றி விசாரித்தபோது, முஜிப்ரகுமான், சுஜின் ஆகியோர் பணத்தை திருடியதும், இவர்களுக்கு உடந்தையாக எஸ்ஐ கண்ணனும் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து முஜிப் ரகுமான், சுஜின் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 3 பேரிடமும் துறைரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.