திருவில்லிபுத்தூர்: கொரோனா ஊரடங்கால் திருவில்லிபுத்தூரில் பால்கோவா தயாரிப்பு பணி முடங்கியுள்ளது. இதனால் இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். மதுரைக்கு மல்லி, நெல்லைக்கு அல்வா, மணப்பாறைக்கு முறுக்கு, சாத்தூருக்கு சேவு என்ற வரிசையில் திருவில்லிபுத்தூர் என்றாலே ஆண்டாள் கோயிலும், பால்கோவாவும்தான் நினைவுக்கு வரும். இங்கு தயாரிக்கப்படும் பால்கோவா சுவையானதாக இருக்கும். கொரோனா ஊரடங்கு காரணமாக பால்கோவா தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பால்கோவா தயாரிப்பில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
வாழ்வாதாரம் பாதித்துள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் கூறுகையில், ‘விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் இருந்தாலும் திருவில்லிபுத்தூரில் பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் எதுவும் இல்லை. இங்கு முக்கிய தொழிலாக விவசாயமும், அதற்கு அடுத்தபடியாக பால்கோவா தயாரிப்பு தொழிலும் உள்ளது. ஆரம்ப கட்டத்தில் குறிப்பிட்ட சிலரே இத்தொழிலில் ஈடுபட்டனர். ஆனால், தற்போது இன்று குடிசை தொழிலாக நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதால் பால்கோவா தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். வேலைவாய்ப்பு இழந்த எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றனர்.