×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜோகோவிச்-நடால் மோதல்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் முன்னணி வீரர்களான நோவாக் ஜோகோவிச்சும், ரஃபேல் நடாலும் மோதுகின்றனர். நேற்று நடந்த முதலாவது காலிறுதி போட்டியில் ஸ்பெயின் வீரரும், நடப்பு சாம்பியனுமான ரஃபேல் நடால், அர்ஜென்டினாவின் இளம் வீரர் டீகோ ஷ்வார்ட்ஸ்மானை எதிர்த்து மோதினார். ஏடிபி தரவரிசையில் நடால் 3ம் இடத்திலும் ஷ்வார்ட்ஸ்மான் 10ம் இடத்திலும் உள்ளனர். இதில் முதல் செட்டை 6-3 என எளிதாக நடால் கைப்பற்றினார்.

2வது செட்டில் ஷ்வார்ட்ஸ்மான் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். துவக்கத்திலேயே நடாலின் கேமை பிரேக் செய்த அவர், அந்த செட்டில் 3-0 என முன்னிலை பெற்றார். இருப்பினும் அடுத்தடுத்து நடால், ஷ்வார்ட்ஸ்மானின் கேம்களை பிரேக் செய்ய, ஆட்டம் 3-3 என்ற சமநிலைக்கு வந்தது. அந்த செட்டில் 5-4 என ஷ்வார்ட்ஸ்மான் முன்னிலையில் இருந்த போது, நடாலின் சர்வீசை எதிர்கொண்டார். மிகச் சரியான பிளேஸ்மென்ட்டுகளின் மூலம் அந்த கேமை பிரேக் செய்த அவர், 2வது செட்டை 6-4 என கைப்பற்றி, நடாலுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதையடுத்து 3வது செட்டில் நடாலின் கை ஓங்கியது. பேஸ் லைனில் இருந்து நெட்டுக்கு ஏறி, மாறி மாறி இருபுறமும் பந்தை பிளேஸ் செய்து, ஷ்வார்ட்ஸ்மானை ஓட விட்டார். அந்த செட்டை 6-4 என நடால் கைப்பற்றினார். 4வது செட்டில் நடாலின் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு முன்னால் ஷ்வார்ட்ஸ்மான், மொத்தமாக சரணடைந்து விட்டார். அந்த செட்டை 6-0 என கைப்பற்றி, காலிறுதியில் வெற்றி பெற்ற நடால், ெவற்றிகரமாக அரையிறுதிக்கு தகுதி பெற்றார். நேற்று 2வதாக நடந்த காலிறுதியில் ஏடிபி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ெசர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சும், இத்தாலி வீரர் மேட்டியோ பிரெட்டினியும் மோதினர்.

இதில் முதல் 2 செட்களை 6-3, 6-2 என எதிர்ப்பே இல்லாமல் ஜோகோவிச் கைப்பற்றினார். செம்மண் மைதானத்தில் திறமையாக ஆடக்கூடிய பிரெட்டினி, 3வது செட்டை டைபிரேக்கரில் 7-6 என கைப்பற்றினார். 4வது செட்டிலும் அவர் சிறப்பாகவே ஆடினார். இருப்பினும் அந்த செட்டை ஜோகோவிச் கைப்பற்றி, பிரெட்டினியின் அரையிறுதிக் கனவை முடித்து வைத்தார். நாளை நடைபெற உள்ள முதலாவது அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவும், கிரீஸ் வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாசும் மோதுகின்றனர். 2வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் நடாலை எதிர்த்து, ஜோகோவிச் மோதவுள்ளார்.

இன்று மகளிர் ஒற்றையர் அரையிறுதி
மகளிர் ஒற்றையரில் இன்று அரையிறுதி போட்டிகள் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நடக்கும் அரையிறுதியில், தரவரிசையில் 32வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் 29 வயதான அனஸ்தேசியா, 82வது இடத்தில் உள்ள 23 வயதான ஸ்லோவேனியாவின் தமரா ஸிடான்செக் மோதுகின்றனர். டென்னிஸ் களத்தில் முதன்முறையாக இருவரும் நேருக்கு நேர் மோதுகின்றனர். இரவு 7.45 மணிக்கு நடக்கும் மற்றொரு அரையிறுதியில், 17ம் நிலை வீராங்கனையான கிரீஸ் நாட்டின் மரியா சக்கரி (25), 33 ரேங்கில் உள்ள 25 வயதான செக் குடியரசின் கிரெஜ்சிகோவாவுடன் மோதுகிறார். இவர்கள் இருவரும் இதற்கு முன் மோதிய 2 போட்டிகளிலும் கிரெஜ்சிகோவாவே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : French Open ,Djokovic ,Nadal , French Open tennis: Djokovic-Nadal clash in semifinals
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!