×

'நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும்' - ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி: நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் பாதிப்பு மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மக்களிடமும் தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால், பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிக்கு தொடர்ந்து பற்றாக்குறை நீடித்து வருகிறது. இதனிடையே நாடு முழுவதும் கடந்த மே 1ம் தேதியில் இருந்து 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அதே போன்று, மத்திய அரசிடம் இருந்து இலவச கொரோனா தடுப்பூசிகளும் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கும் போடுவதற்கான தடுப்பூசியை சோதனை செய்யும் பணியும் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும். தடுப்பூசிக்காக ஆன்லைனில் பதிவு செய்வது மட்டும் போதாது.

தடுப்பூசி மையத்துக்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும். இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள கோவின் இணையப் பதிவைக் கட்டாயமாக்கக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Rahul Gandhi , 'Everyone in the country should be vaccinated' - Rahul Gandhi
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...