×

ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தைகூட ஆக்கிரமிக்க அரசு அனுமதிக்க கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி கட்டப்படும் ரிசார்ட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  அவர் தனது மனுவில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால், மரங்கள் வெட்டப்பட்டு, இயற்கை எழில் பாதிக்கப்பட்டுள்ளது. பறவைகள் மாயமாகி வருகின்றன. நீரோடைகள் தடுக்கப்படுவதால் நிலச்சரிவுகள் ஏற்படுகிறது. நடுவட்டம் கிராமத்தில் ஒரு மருத்துவர் தமிழ்நாடு மலைப்பகுதி கட்டிடங்கள் சட்ட விதிகளை மீறி ரிசார்ட் கட்டி வருகிறார். அதற்காக வன நிலங்களை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்களை குவித்துள்ளார். வனப்பாதையை விரிவுபடுத்தியுள்ளார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுவட்டம் பகுதியில் உள்ள வனப்பகுதி நிலத்தை அளவீடு செய்து எல்லையை வரையறுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது. அரசு கொள்கை முடிவை எடுக்காத நிலையில் எந்த வனப்பகுதியும் கட்டிட பயன்பாட்டுக்கு பயன்படுத்தக்கூடாது. ஆக்கிரமிப்பு குறித்து கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுதாரர் கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். நீலகிரி மாவட்ட கலெக்டர், மாவட்ட வனத்துறை அதிகாரி ஆகியோர் உடனடியாக நடுவட்டம் கிராமத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும். வனப்பகுதியில் இருந்து தனியாக ரிசார்ட்டுக்கு தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Chennai High Court , Government should not allow occupation of even an inch of forest land: Chennai High Court instruction
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...