புதுடெல்லி: ‘விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, தனது வேளாண் சட்டங்களை ரத்து செய்வது மட்டுமே மத்திய அரசுக்கு ஒரே வழி,’ என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்தாண்டு முதல் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் போராட்டத்தால் உடல்நலக் குறைவு, பருவநிலை மாற்றம், தற்கொலை காரணமாக, இதுவரை 500 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இது பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘விவசாயத்தை பாதுகாப்பதற்காக விவசாயிகள் உயிரிழந்து கொண்டு இருக்கின்றனர். ஆனாலும், அச்சமின்றி உண்மையுடன் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, தனது சட்டங்களை ரத்து செய்வது மட்டுமே மத்திய அரசுக்கு இருக்கும் ஒரே வழி,’ என்று கூறியுள்ளார். இத்துடன் ‘போராட்டத்தில் 500 விவசாயிகள் பலி’ என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.
* மம்தாவுடன் திகைத் சந்திப்பு
டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் சங்கத் தலைவர்கள், நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தாவை கொல்கத்தாவில் சந்தித்து ஆதரவு கோரினர். பாரதிய கிசான் சங்கத் தலைவர்களான ராகேஷ் திகைத், யுத்விர் சிங் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். அப்போது, விவசாயிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்த திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று மம்தா தெரிவித்தார்.