சென்னை: தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள் வருகிற 14ம் தேதிக்குள் மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடந்த பருவ தேர்வுகளுக்கு மறுதேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியது. அதன்படி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மறுதேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள் வருகிற 14ம் தேதிக்குள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடந்த பருவ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களும் மறுதேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு வழக்கமாக பெறப்பட்ட தொகையை விண்ணப்ப கட்டணமாக செலுத்தி பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே, மறுதேர்வுக்கு பதிவு செய்த மாணவர்கள் தற்போது பதிவு செய்ய தேவையில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.