கேடிசி நகர் : பாளை அரியகுளத்தில் முறையான பராமரிப்பின்றி படுமோசமான சாலையால் அவதிப்படும் கிராம மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் சீரமைத்துதருவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். பாளை அருகே அரியகுளம் கிராமத்தில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெற்கு தெரு மற்றும் வடக்கு தெருவை இணைக்கும் சாலையில் சாலை பழுதடைந்து யானையை பிடிக்கும் அளவுக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் மற்றும் திருமணம் போன்ற விழாக்காலங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும் சேதமான சாலையில் தண்ணீர் தேங்கி குட்டை போல் காணப்படுகிறது. சாலையை சீரமைக்ககோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தொடர்ந்து அவதிப்படும் மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிஷயத்தில் தலையிட்டு முறையான பராமரிப்பின்றி உருக்குலைந்து படுமோசமாக காணப்படும் இச்சாலையை சீரமைக்க வேண்டும். கழிவுநீரோடை வசதி ஏற்படுத்தி தருவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.