புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்த தொழிலதிபர் மெகுல் சோக்சி, இந்தியாவில் இருந்து தப்பி ஆன்டிகுவா மற்றும் பர்புடாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். கடந்த மாதம் 23ம் தேதி அவர் ஆன்டிகுவாவில் இருந்து மாயமானார். அவர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், டொமினிகாவில் சட்ட விரோதமாக நுழைந்ததாக அவரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், ஆன்டிகுவா போலீசுக்கு மெகுல் கோக்சி ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், ‘பார்பாரா ஜபாரிகாஸ் (மெகுல் கோக்சி காதலி என்று கூறப்படுபவர்) வீட்டில் இருந்து தன்னை டொமினிகாவுக்கு படகில் கடத்தி சென்றனர். ஆன்டிகுவாவில் இருந்து வெளியேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட படகில் இரண்டு இந்தியர்கள் இருந்தனர்’ என்று கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பார்பாரா ஜபாரிகாஸ், ‘‘மெகுல் சோக்சி கடத்தப்பட்டதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. கடந்த ஆண்டு என்னுடன் நடந்த சந்திப்பில் தன்னை ‘ராஜ்’ என்ற பெயரை கூறி அறிமுகமானார். அவர் எனக்கு போலி வைர மோதிரம், பிரேஸ்லெட் ஆகியவை பரிசாக வழங்கினார். தற்போது நானும், குடும்பத்தினரும் மன அழுத்தத்தில் உள்ளோம்,’’ என்றார்.