சென்னை: துணிவு மற்றும் வீர செயல்களுக்காக வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் சீத்தாலட்சுமி வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: துணிவு மற்றும் சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும், தமிழக முதல்வரால் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், ஒரு பதக்கமும் வழங்கப்படும். தமிழ்நாட்டை சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த ஒரு பெண் விருதுபெற தகுதியுடையவராவர். இயற்கை பேரழிவுகள், விபத்துகள், நீரில் மூழ்கும் சம்பவங்கள், தீ தொடர்பான சம்பவங்கள், திருட்டு மற்றும் துணிச்சலான முயற்சிகள் ஆகியவற்றின் போது பல தனிநபர்கள் நிகழ்த்திய பல்வேறு வீர சாகச சம்பவங்கள் தொடர்பாக இவ்விருது வழங்கப்படுகிறது.
2021ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பங்கள், விரிவான தன்விவர குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் தகுந்த ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ அரசு செயலாளர் பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600009 என்ற முகவரியில் 30-6-2021க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.