பாரிஸ்: பிரான்சில் கொரோனாவுக்கு பிறகு இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். தென்கிழக்கு பிரான்சில் உள்ள டியன் ஹெர்மிடேஜ் எனும் சிறு நகரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சாலையில் அவருக்காக காத்திருந்த மக்களுக்கு வணக்கம் கூறி சந்திக்க சென்றார். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், மேக்ரானின் கையை பிடித்து அவரது கன்னத்தில் பளார் என அறைந்தார். அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர்கள், அந்த நபரை பிடித்து, அதிபரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை பிரான்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.