×

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து 12-ம் தேதி திருவாரூர் சென்று ஆய்வு செய்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 12-ம் தேதி திருவாரூர் சென்று கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வரான பிறகு மு.க.ஸ்டாலின் முதல் முறையாக திருவாரூர் மாவட்டத்துக்கு செல்ல உள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.  இந்நிலையில் 12-ம் தேதி திருவாரூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றது முதல் சேலம், கோயமுத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு  ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். 


மேலும் காணொலி காட்சி வாயிலாகவும் மாவட்ட ஆட்சியர்களுடன் அவ்வப்போது  கொரோனா தடுப்புப்பணிகள் பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்ததையடுத்து அவர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  35 ஆயிரத்துக்கும் மேலாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக படிப்படியாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை  குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. 



Tags : Thiruwarur ,Stalin , Corona, Preventive Work, Thiruvarur, Research, MK Stalin
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...