சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் 7.5 சதவித உள் ஒதுக்கீடு காரணமாக மொத்தமுள்ள 3,400 இடங்களில் அரசுப் பள்ளியில் படித்த 405 மாணவர்களுக்குத் தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. மீதமுள்ள மூவாயிரம் இடங்களில் சி.பி.எஸ்.இ. மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, நீட் தேர்வினால் இழைக்கப்பட்டு வரும் அநீதியைப் போக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். நீட் தேர்விற்கு மாற்றாக எந்த அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவது என்பது குறித்து வல்லுநர் குழுவை அமைத்து, பரிந்துரையை ஏற்று தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை அமைந்திட, குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.