துபாய்: துபாயில் மெட்ரோ ரயிலில் மாஸ்க் அணியாமல் டான்ஸ் ஆடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். துபாயில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், அங்குள்ள மெட்ரோ ரயிலில் பயணி ஒருவர் மாஸ்க் அணியாமல் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சக பயணிகள் அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க, டான்ஸ் ஆடிய நபர் மட்டும் மாஸ்க் அணியவில்லை. இந்த வீடியோவைப் பார்த்த துபாய் போலீசார் சம்பந்தப்பட்ட நபர் குறித்து விசாரித்தனர். அந்த நபரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதுகுறித்து துபாய் போக்குவரத்து பாதுகாப்புத்துறை அதிகாரி ஒபைத் அல் ஹத்பூர் கூறுகையில், ‘‘பொது இடத்தில் மாஸ்க் அணியாமல் விதிமீறலில் ஈடுபட்டதாகவும், பொருத்தமற்ற நடத்தைகளை மேற்கொண்டதற்காகவும் அவர் கைது செய்யப்பட்டார். யுஏஇ சட்டப்பிரிவு 358ன் படி அவர் 6 மாத சிறைதண்டனை அல்லது 5 ஆயிரம் தினார் (சுமார் ரூ.1 லட்சம்) அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும். மாஸ்க் அணியாததற்காக அவருக்கு கூடுதலாக அபராதமும் விதிக்கப்படலாம்’’ என்று கூறியுள்ளார்.