×

டெல்லியில் 6 மாதமாக நீடிக்கும் போராட்டம் : ஹரியானாவில் இருந்து 3500க்கும் மேற்பட்ட வாகனங்களில் கருப்பு கொடிகளுடன் விவசாயிகள் அணிவகுப்பு!!

டெல்லி : வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மேலும் பல விவசாயிகள் ஹரியானாவில் இருந்து வாகனங்களில் குவிந்து வருகின்றனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். சிங்கு, திக்ரி, காசியாபாத் ஆகிய இடங்களில் கூடாரங்கள் அமைத்து இவர்கள் முகாமிட்டுள்ளனர். இவர்களுடன் மத்திய அரசு பல கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தன.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இந்த நிலையில் ஹரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து 3500க்கும் மேற்பட்ட வாகனங்களில் கருப்பு கொடிகளுடன் விவசாயிகள் போராட்டத்திற்கு வலு சேர்க்க அணிவகுத்து வருகின்றனர். பாரதிய கிசான் யூனியன் தலைவர் குருனாம் சிங் தலைமையில் அணிவகுக்கும் இவர்கள், விரைவில் டெல்லியை அடைய உள்ளனர். இதே போன்று பானிபட் நகரில் இருந்து மற்றொரு குழுவினர் வரும் 10ம் தேதி டெல்லி வர உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஹரியானாவில் தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறவும் சிறையில் உள்ளவர்களை விடுவிக்கக் கோரியும் அம்மாநிலத்தின் அனைத்து காவல் நிலையங்கள் முன்பாக இன்று தர்ணா போராட்டத்திற்கு சம்யுக்த் கிசான் மோச்சா அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Tags : Delhi ,Haryana , விவசாயிகள் ,அணிவகுப்பு
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...