வாஷிங்டன்: இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொண்ட இந்திய மாணவர்கள், மீண்டும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க கல்வி நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள 400க்கும் மேற்பட்ட கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். அதில், சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்திய மாணவர்கள்தான் அதிகமாக படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் இந்திய மாணவர்கள் அங்கு படிக்கச் செல்கின்றனர். இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் இந்த கல்வி நிலையங்களில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. எனவே, மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி போட்டுள்ள மாணவர்களுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
இதை போட்டுக் கொண்டவர்கள், உலக சுகாதார அமைப்பால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவால், கோவாக்சின் போட்டுக் கொண்ட இந்திய மாணவர்கள் தவித்து வருகின்றனர். கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுகலை படிப்பை தொடங்க இருக்கும் இந்தியாவை சேர்ந்த மாணவி மிலோனி தோஷி, கோவாக்சின் தடுப்பூசியின் 2 டோஸ்களை போட்டுக் கொண்டுள்ளார். ஆனால், அவரை மீண்டும் தடுப்பூசி போடும்படி பல்கலைக் கழகம் வலியுறுத்தி இருக்கிறது. இதன் காரணமாக, செய்வதறியாது தவித்து வருகிறார்.
காரணம் என்ன?
கோவாக்சின் மட்டுமின்றி, ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கும் மீண்டும் தடுப்பூசி போடும்படி அமெரிக்க கல்வி நிலையங்கள் உத்தரவிட்டுள்ளன. இந்த தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார நிறுவனம் இதுவரை அனுமதி அளிக்காததால், அதை ஏற்க முடியாது என அமெரிக்க அரசின் உத்தரவுப்படி இந்த கல்வி நிலையங்கள் அறிவித்துள்ளன. தற்போது, ஸ்புட்னிக்கையும் பயன்படுத்த இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அதெல்லாம் தெரியாது
போட்டே ஆகணும்...
அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டன் நார்லன்ட் கூறுகையில், “உலக சுகாதார அமைப்பின் அனுமதி பெறாத தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள் 28 நாட்கள் காத்திருந்து, அதன் அனுமதி பெற்ற ஏதாவது ஒரு தடுப்பூசியை மீண்டும் போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு 2 தடுப்பூசி
களை கலந்து செலுத்திக் கொள்வது
பாதுகாப்பானதா? என்பது குறித்து
இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை,”
என்றார். ஒவ்வொரு ஆண்டும் சுமார்
இரண்டு லட்சம் இந்திய மாணவர்கள்
அமெரிக்க கல்லூரிகளுக்கு
வருகின்றனர். இது
அவர்களுக்கு மிகவும்
சவாலானதாக அமைந்துள்ளது.