சாயல்குடி: ராமநாதபுரம் முன்னாள் எம்பி ராஜேஸ்வரன், கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே ஏ.பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (76). டாக்டரான இவர் சாயல்குடியில் மருத்துவமனை நடந்தி வந்தார். நடிகர் சிவாஜிகணேசனின் தீவிர ரசிகரான இவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1981, 1984, 1991ல் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி ஆனார். 1996ம் ஆண்டு தேர்தலில் தமாகாவை சேர்ந்த உடையப்பனிடம் தோல்வியடைந்தார்.பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சரத்பவாரின் தேசியவாத காங்கிரசில் இணைந்தார். அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராகவும், தமிழக தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். வயது முதிர்வின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து விலகி மதுரை கோச்சடையில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு, இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.