பெங்களூரு: கர்நாடகாவில் ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் சிலர் தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வரும் சூழலில் கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார். பெங்களுருவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கட்சி தலைமை தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நாள் வரைக்கும் தான் முதலமைச்சர் பதவியை தொடரப்போவதாக கூறினார். முதலமைச்சர் எடியூரப்பாவுக்கும் கர்நாடகாவில் ஆளும் பாரதிய ஜனதாவின் சில எம்எல்ஏக்களுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
எடியூரப்பாவுக்கு எதிராக கடந்த வாரம் டெல்லி சென்ற சொந்த கட்சி எம்எல்ஏக்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை முறைத்ததாக தெரிகிறது. அதை தொடர்ந்து எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக கர்நாடக ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன. எடியூரப்பா தங்களுக்கு அமைச்சர் பதவி தரவில்லை என்பது பாஜக எம்எல்ஏக்கள் சிலரின் குற்றச்சாட்டாகும். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் மதசார்பற்ற ஜனதா தளத்தில் எம்எல்ஏக்களாக இருந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்து குமாரசாமியின் ஆட்சியை கவிழ்த்தவராவர்.
உட்கட்சி பூசல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. கட்சியின் மாநில துணை தலைவரும் எடியூரப்பாவின் மகனுமான விஜேந்திராவின் தலையீடு அதிகமாக இருப்பதும் எம்எல்ஏக்களின் அதிருப்திக்கு காரணமாக கூறப்படுகிறது.