×

ஆற்றில் குளிக்க வருவோரை குறிவைத்து 6 மனிதர்களை கொன்று ‘ருசி’ கண்ட முதலை: சிறுவன் சிக்கி பலியானதால் மக்கள் போராட்டம்

பரான்: ராஜஸ்தானில் ஆற்றில் குளிக்க வருவோரை குறிவைத்து கொன்று சாப்பிடும் முதலை, தற்போது சிறுவன் ஒருவனை கொன்றுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டம் அச்சன்ரவா கிராமத்தின் வழியாக பர்வன் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் நிறைய முதலைகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன், 14 வயது சிறுவன் ஒருவன் ஆற்றின் கரையில் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது, பதுங்கியிருந்த முதலை ஒன்று, ஆற்றில் இருந்த சிறுவனை நீருக்குள் ‘லபக்’ என்று வாயில் கவ்விய படி இழுத்துச் சென்றது. அடுத்த சில நிமிடங்களில் அந்த முதலை மாயமானது.

அந்த சிறுவனும், முதலைக்கு இரையாகிவிட்டான். கடந்த 4 ஆண்டுகளில் இப்பகுதியில் வசிக்கும் முதலை ஒன்று இதுவரை 6 மனிதர்களை கொன்றுள்ளது. இதுவரை இருவருக்கு காயப்படுத்தி ஏற்படுத்தி உள்ளது. மனிதர்களை சாப்பிடும் இந்த முதலையை பிடிக்க, அப்பகுதிமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது சிறுவன் ஒருவனை முதலை இழுத்துச் சென்றதால், அப்பகுதிமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். பின்னர், ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவனின் உடல் எச்சங்களை ஏற்கவும் மறுத்தனர்.

ஆற்றில் குளிக்க வரும் மனிதர்களை குறிவைத்து, அவர்களை கொன்று சாப்பிடும் முதலையை பிடித்தால் மட்டுமே, சிறுவனின் உடல் எச்சங்களை வாங்கிச் செல்வதாக கூறி போராட்டம் நடத்தினர். மேலும், சிறுவன் பலியானதற்கு இழப்பீடும் கோரினர். அதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் தலையிட்டு, குறிப்பிட்ட முதலை விரைவில் பிடித்து, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு முறையான இழப்பீடு பெற்றுத்தரப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பிறகு, சிறுவனின் சடலத்தை எடுத்துச் சென்றனர். தற்போது, அந்த முதலையை வலைவிரித்து பிடிக்கும் வேலையில், வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Crocodile kills 6 people, tries to bathe in river
× RELATED ஆந்திராவில் 1996ம் ஆண்டு பட்டியலின...