பெரம்பூர்: தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலையால் அரசு மருத்துவமனைகள் நிரம்பியுள்ளது. இதனால் பள்ளிக்கூடங்கள், சமூக நலக்கூடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மையங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் ஆலோசனை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நேற்று சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளி கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து ஏற்பட்டால் எப்படி தப்பிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
செம்பியம் தீயணைப்புத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நிலைய அதிகாரி செல்வன் தலைமை வகித்தார். இதில், 6 பேர் கொண்ட தீயணைப்புக்குழுவினர், கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைப்பது, நோயாளிகளை அப்புறப்படுத்துவது, தீ விபத்தால் ஏற்படும் காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் தீ தடுப்பு சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் தீயணைப்புத்துறை வீரர்கள் செய்முறை விளக்கமளித்தனர்.