ஈரோடு: ஈரோட்டில் அரசின் உத்தரவை மீறி செயல்பட்ட மளிகை கடை மற்றும் ஒர்க்ஷாப்பிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகர் பகுதியில் அரசின் ஊரடங்கு தடையை மீறி பாண்டியன் மளிகை என்ற கடை நடத்தி வருவதாக தகவல் வந்தது. இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் உத்தரவின்பேரில், கருங்கல்பாளையம் சுகாதார ஆய்வாளர் சதீஷ் சம்மந்தப்பட்ட பகுதியில் ரோந்து சென்றார். அப்போது, ஊரடங்கினை மீறி கடையின் கதவை திறந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மளிகை கடையின் உரிமையாளர் பாண்டியன் (49) என்பவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதேபோல், ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ரோட்டில் ஜனனி ஆட்டோ ஓர்க்ஷாப் தடையை மீறி செயல்பட்டதால், அந்த ஒர்க்ஷாப் சீல் வைக்கப்பட்டு, ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பவானி: பவானி நகராட்சிப் பகுதியில் கொரோனா தடுப்பு விதிகளை மீறி செயல்பட்ட மளிகை கடைக்கு நகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவலத் தடுக்க தளர்வற்ற முழு அடைப்பு அமலில் உள்ளது. இதனால், மளிகைக் கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், காய்கறிக் கடைகள், சந்தைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பவானி - ஈரோடு ரோட்டில் விதிகளை மீறி மளிகைக் கடை திறக்கப்பட்டு, வியாபாரம் நடைபெறுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதன்பேரில் நகராட்சி ஆணையாளர் (பொ) செந்தில்குமார், பவானி போலீஸ் எஸ்ஐ வடிவேல்குமார், நகராட்சி வரி வருவாய் ஆய்வாளர் ரவி மற்றும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மளிகைக் கடையில் திறந்து வைத்து வியாபாரம் நடைபெற்று வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, மளிகை கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்ததோடு, அபராதமும் விதித்தனர்.