ஜோகன்னஸ்பர்க்: இந்திய வம்சாவளியை சேர்ந்த குப்தா குடும்பத்தினர், அவர்களின் வர்த்தக கூட்டாளி இக்பால் மீர் சர்மாவின் சொத்துக்களை முடக்கி தென்னாப்பிரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சகரன்பூரில் இருந்து 1990ம் ஆண்டில் அதுல், ராஜேஷ் குப்தா சகோதரர்கள் தென்னாப்பிரிக்காவிற்கு சென்று குடியேறினார்கள். முதன் முதலில் காலணி வியாபாரம் செய்ய தொடங்கிய இவர்கள், பின்னர் அனைத்து துறைகளிலும் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்தினார்கள். தென்னாப்பிரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் மூலம் தங்கள் நிறுவனங்களுக்கு முறைகேடாக பணப் பரிமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அரசு ஒப்பந்தங்கள், திட்டங்களை ஆட்சியில் இருந்தவர்களுக்கு பெரிய அளவில் லஞ்சம் கொடுத்து பெற்றதாகவும் இவர்களின் மீது குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, முன்னாள் அதிபர் சுமாவுடன் இவர்கள் நெருக்கமாக இருந்து இந்த காரியங்களை சாதித்துள்ளனர். இதற்காக, அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருந்த நிலையில், துபாய்க்கு தப்பிச் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களை நாடு கடுத்துவதற்கான நடவடிக்கைகளை தென்னாப்பிரிக்க அரசு தற்போது செய்து வருகிறது. இந்நிலையில், குப்தா குடும்பம் மற்றும் அவரது கூட்டாளி இக்பால் மீர் ஷர்மா ஆகியோரின் சொத்துக்களை முடக்கி தென்னாப்பிரிக்க நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.
மீர் சர்மா தற்போது சிறையில் உள்ளார். அவரது ஜாமீன் மனு திங்களன்று விசாரணைக்கு வருகின்றது. அதுல் குப்தா, ராஜேஸ் குப்தா அவர்களின் மனைவி சேட்டாலி மற்றும் ஆர்தி ஆகியோருக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்குபம்டி சர்வதேச போலீஸ் அமைப்பை கடந்த வியாழக்கிழமை தென்னாப்பிரிக்கா அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் குப்தா குடும்பத்தினருக்கு பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள் இருக்கின்றன.