புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதற்கு பாஜ அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் ஆளும் சட்டீஸ்கர், பஞ்சாப் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் ஜார்கண்ட் மாநிலங்களில் இந்த சான்றிதழில் இருந்து மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக இம்மாநில முதல்வர்களின் புகைப்படங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான அரசும் தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமரின் புகைப்படத்தை நீக்கி இருக்கிறது. அதற்கு பதிலாக முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படம், தடுப்பூசி சான்றிதழில் சேர்க்கப்பட்டு உள்ளது. ஆனால், 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களில் தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கான சான்றிதழிலில் மட்டுமே மம்தாவின் புகைப்படம் இடம் பெறுகிறது. மற்ற வயதினருக்கான சான்றிதழ்களில் மோடியின் புகைப்படமே இடம் பெற்றுள்ளது.