சென்னை: அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், ஆர்எஸ்எம் புட்ஸ், தலப்பாகட்டி ஓட்டல், பிரசன்னா புட்ஸ் ஆகியவை தங்கள் உணவகங்களில் பார்சலில் வாங்கும் உணவுகளுக்கு சேவை வரி விதித்து ஜிஎஸ்டி துறை உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: பெரும்பாலான ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகளில் பார்சல் உணவுக்காக தனி கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொலைபேசி, இமெயில் மற்றும் ஆன்லைன் மூலமாக உணவு பொருட்கள் ஆர்டர் செய்யப்படுகின்றன. இவை ஆன்லைன் நிறுவனங்களால் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஒட்டல்களிலும் பார்சல் கவுன்டர்கள் சாப்பிடும் இடத்திலிருந்து தனியாக அமைக்கப்பட்டுள்ளன.
ஓட்டல்களில் உணவு தயாரிக்கப்பட்டு உணவு உண்ண வருபவர்களுக்கான மேஜைகளில் பகிரப்படும்போது வெயிட்டர்கள் சேவை செய்கிறார்கள். வாடிக்கையாளர்களுக்காக பயன்படுத்தப்படும் பாத்திரங்களை ஓட்டல்கள் வழங்குகின்றன. அவர்கள் உணவை உண்டு முடித்து பில் போடும்வரை அவர்களுக்கு ஓட்டல்கள் அளிக்கும் சேவைக்காக சேவை வரி விதிக்கப்படுகிறது. ஆனால், உணவு மற்றும் குளிர்பானங்கள் பார்சலில் விற்பனை செய்யப்படும்போது ஓட்டல்களின் சேவை தரப்படுவதில்லை. எனவே, அவை சேவை வரிக்குள் வராது. இது பல உத்தரவுகளில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை எதிர்த்து எந்த மேல் முறையீடும் இதுவரை செய்யப்படவில்லை. எனவே, ஓட்டல்களில் பார்சல் மூலம் வாங்கும் உணவு பொருட்களுக்கு சேவை வரி விதிக்கக்கூடாது. சேவை வரி விதிக்கும் ஜிஎஸ்டி துறையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.