×

இணை நோய் மற்றும் வசதியில்லாதவர்களுக்கு திரும்ப ஒப்படைக்கும் வகையில் பல்ஸ் ஆக்சிமீட்டர் வழங்கப்படும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை பராமரிக்கவும், கண்காணிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை மேற்கொள்வதற்கு மாநகராட்சியின் சார்பில் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோயுடைய கோவிட் தொற்று பாதித்த நபர்கள் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டு சொந்தமாக பல்ஸ் ஆக்சிமீட்டர் வாங்க வசதியில்லாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த நபர்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் மூலமாக பல்ஸ் ஆக்சிமீட்டர் வழங்கப்பட உள்ளது.  

இந்த பல்ஸ் ஆக்சிமீட்டர் கொண்டு நோயாளிகள் நாள்தோறும் தங்கள் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவினை இருமுறை கண்காணித்து தன்னார்வலர்களிடம் தெரிவிக்க வேண்டும். தொற்று பாதித்த நபர் முழுவதும் குணம் அடைந்தவுடன் பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியை சம்பந்தப்பட்ட தன்னார்வலர் மூலமாக மாநகராட்சிக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு தன்னார்வலர்களிடமிருந்து இதுவரை 10,400 பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளன. கோவிட் தொற்று கண்காணிப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் பல்ஸ் ஆக்சிமீட்டர் போன்ற மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும். உபகரணங்களை வழங்க விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மாநகராட்சியின் மாநகர நல அலுவலர் அலுவலகத்தில் 9498346492 எண்ணில் தொடர்பு கொண்டு பல்ஸ் ஆக்சிமீட்டர் உட்பட உபகரணங்களை நன்கொடையாக வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai Corporation , Pulse Oximeter to be returned to those suffering from co-morbidities and disabilities: Chennai Corporation Notice
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...