×

திருப்போரூர் அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு அதிமுக பெண் நிர்வாகி பலி

சென்னை: திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு படவேட்டம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாரதி (53). இவரது கணவர் காத்தவராயன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன் புனிதன் பிரசாத் 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மகள் கவுதமபிரியா திருமணமாகி கானத்தூரில் கணவருடன் வசித்து வருகிறார். இதனால், பாரதி கண்ணகப்பட்டில் தனியே வசித்து வந்தார். அதிமுக ஒன்றிய மகளிரணி அவைத்தலைவராகவும் பதவி வகித்து வந்தார். கிடைத்த வேலைகள் செய்து வருவாய் ஈட்டி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு சளி மற்றும் காய்ச்சலால் அவதிபட்டிருந்தார். எனவே, வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதால் திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 26ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை திடீரென மோசமானது. மேலும், கண்களில் வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டு நிறம் மாறத் தொடங்கியது. இதனையடுத்து கடந்த 31ம் தேதி மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் அதிகாலை 2.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதனையடுத்து அன்று மாலை 5 மணி அளவில் அவரது உடல், உறவினர்களிடம் காட்டப்பட்டு பின்னர் பெருங்குடி மயானத்தில் எரிக்கப்பட்டது.



Tags : AIADMK ,Thiruporur , AIADMK female executive dies of black fungus near Thiruporur
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...