சென்னை: தடகள பயிற்சி வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜனை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னை நந்தனத்தை சேர்ந்தவர் நாகராஜன் ‘பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற தடகள பயிற்சி மையத்தை சென்னையில் பல இடங்களில் வைத்து நடத்தி வந்தார். இவரிடம் பல தடகள வீராங்கனைகள் பயிற்சி பெற்று வந்தனர். இந்நிலையில் பயிற்சிக்கு வரும் வீராங்கனைகளிடம் தவறாக நடப்பதாக புகார் வந்தது. தொடர்ந்து நாகராஜன் மீது சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார். புகாரில் பல சமயங்களில் பிசியோதெரபி பயிற்சி வழங்குவதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், பயிற்சியின் போது தவறாக நடப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின்படி நாகராஜன் மீது போக்சோ சட்டப்பிரிவு உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மே 28ம் தேதி நாகராஜனை கைது செய்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நாகராஜனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கோரி போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி முகமது பாரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.