சென்னை: ஆந்திராவில் இருந்து மீஞ்சூருக்கு மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண்குமாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், மதுவிலக்கு டிஎஸ்பி செந்தில் மேற்பார்வையில், பொன்னேரி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கீதா லட்சுமி தலைமையில் தனிப்படை போலீசார் மீஞ்சூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மாம்பழம் ஏற்றிவந்த மினி லாரியை வழிமறித்து, சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அப்போது, மாம்பழங்களுக்கு அடியில் 20 பெட்டிகளில் 960 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக, அம்பத்தூரை சேர்ந்த முருகன் (34), ஐசக் (36), நாகராஜ் (38) ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து, மீஞ்சூர் பகுதியில் வைத்து, கூடுதல் விலைக்கு விற்க முயன்றது தெரிந்தது. அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி பறிமுதல் செயப்பட்டது.