லண்டன்: இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இந்திய ஆடவர், மகளிர் அணிகள் நேற்று லண்டன் போய்ச் சேர்ந்தன. அங்கு அவர்கள் நட்சத்திர விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்திய ஆடவர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான 6 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதேபோல் இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு பகல்/இரவு டெஸ்ட், தலா 3 ஒருநாள், டி20 ஆட்டங்களில் விளையாட உள்ளது.
அதற்காக கடந்த 2 வாரங்களாக இந்திய வீரர்கள், வீராங்கனைகள், அவர்களின் குடும்பத்தினர் மும்பையில் குவாரன்டைனில் இருந்தனர். கடைசியாக நடந்த சோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. அதனையடுத்து திட்டமிட்டபடி நேற்று முன்தினம் நள்ளிரவு அனைவரும் தனி விமானத்தில் இங்கிலாந்து புறப்பட்டனர். அவர்கள் நேற்று லண்டன் விமானநிலையம் போய்ச் சேர்ந்தனர். அனைவருக்கும் கொரோன பரிசோதனை செய்யப்பட்டது. அங்கிருந்து இறுதிப்போட்டி நடக்க உள்ள சவுத் ஹாம்டன் சென்ற வீரர், வீராங்கனைகள், நட்சத்திர விடுதிகளில் குவாரன்டைனில் வைக்கப்பட்டனர். டெஸ்ட் இறுதியாட்டத்துக்கு இங்கிலாந்து அரசங்கம் கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளித்துள்ளது. ஆனாலும் எத்தனை நாட்கள் குவாரன்டைனில் இருக்க வேண்டும் என்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) முடிவு செய்யும்.