சென்னை: மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: மத்திய-மாநில அரசின் காவல்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்க்காவல்படை பணியாளர்கள், சிறைச்சாலை பணியாளர்கள், பேரிடர் மேலாண்மையில் ஈடுபடும் தன்னார்வலர்கள், கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் பணியாற்றும் நகராட்சி, வருவாய்துறை ஊழியர்கள் ஆகியோரை முன்களப் பணியாளர்களாக அறிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பத்திரிகை ஊடக பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக கடந்த 4ம் தேதி அறிவித்தார்.
இதுகுறித்து உரிய ஆய்வு செய்து, பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணியாற்றி வரும், அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணியாற்றி வரும் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு பணியாளர்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புதுறை இயக்குனரால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்தினர் ஊரடங்கின் போது தடையின்றி பணிபுரிய அனுமதிக்கப்படும்.
மத்திய அரசின் ஆணைப்படி பத்திரிகை, ஊடக பணியாளர்கள் மத்திய அரசின் முன்கள பணியாளர்கள் பட்டியலில் இல்லாவிடினும் 18 முதல் 45 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் போது, முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படும். கொரோனா நோய் தொற்றின் காரணமாக, மேற்கூறிய பணியாளர்கள் இறக்கும் போது, அவர்களின் குடும்பங்களுக்கு செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறை வாயிலாக உரிய நிவாரணம் வழங்கப்படும்.