திருவனந்தபுரம்: கேரளாவில் தமிழில் பதவிப் பிரமாணம் செய்ததில் பிழை ஏற்பட்டதால், தேவிகுளம் எம்எல்ஏ ராஜா ேநற்று மீண்டும் பதவியேற்று கொண்டார். கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்று, கடந்த 20ம் தேதி பதவியேற்றது. 24ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் புதிய எம்எல்ஏ.க்கள் பதவி ஏற்றனர். அப்போது, இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ராஜா தமிழில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.பதவிப் பிரமாணம் செய்யும் போது தெய்வத்தின் பெயரால் அல்லது உளமார என கூறித்தான் உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும். ஆனால், ராஜா பதவியேற்கும்போது இந்த 2 வார்த்தைகளும் இடம் பெறவில்லை. பதவிப் பிரமாணம் செய்து முடித்த பின்னர்தான் இந்த விவரம் சட்டப்பேரவை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
கேரள தலைமை செயலகத்தின் தமிழ்த் துறையில் இருந்து கொடுக்கப்பட்ட பதவிப் பிரமாண வாசகத்தில் ஏற்பட்ட தவறுதான் இந்த குளறுபடிக்கு காரணம் என்று தெரிய வந்தது. இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை சபாநாயகர் ராஜேஷ் முன்னிலையில், ராஜா மீண்டும் எம்எல்ஏ,வாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அவர் ‘உளமார உறுதி கூறுகிறேன்’ என தமிழில் பதவியேற்றார்.