டெஹ்ரான்: ஈரான் கடற்படையின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்று நடுக்கடலில் தீப்பிடித்து கடலில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 1,270 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஜஸ்க் துறைமுகத்தில், ஹர்முஸ் ஜலசந்திக்கு அருகே ஓமன் வளைகுடாவில் ‘கார்க்’ எனும் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. அது அதிகாலை 2.25 மணி அளவில் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. சுமார் 20 மணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை என ஈரான் கடற்படை வட்டார தகவல்கள் கூறி உள்ளன. இதனால், இந்த கப்பல் மூழ்கி உள்ளது. கப்பல் நடுக்கடலில் தீப்பிடித்து வானுயர கரும்புகை பறப்பது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.
அதே போல், கப்பலில் இருந்து அனைத்து மாலுமிகளும், ஊழியர்களும் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து எதனால் நடந்தது என அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு ஈரான் ராணுவம் நடத்திய பயிற்சியின் போது, ஜஸ்க் துறைமுகத்தில் ஏவுகணை ஒன்று தவறுதலாக இந்த கப்பலை தாக்கி 19 மாலுமிகள் இறந்தனர். அதன் பிறகு அதே துறைமுகத்தில் மர்மமான முறையில் தற்போது மிகப்பெரிய கப்பல் தீ விபத்துக்குள்ளாகி மூழ்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.