×

என் மீது புகார் அளித்தும் பத்மா சேஷாத்திரி பள்ளி நடவடிக்கை எடுக்கவில்லை: நிர்வாகம் கொடுத்த தைரியத்தில்தான் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தேன்: பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பரபரப்பு வாக்குமூலம்

* ஆபாச படங்கள், வீடியோக்கள் வைத்து நேரடி விசாரணை
* கொரோனா காலம் என்பதால் பள்ளியில் யாரும் இருக்க மாட்டார்கள். செக்யூரிட்டிகள் மட்டும் தான் இருப்பார்கள். அவர்களும் வகுப்பு அறை பக்கம் வர மாட்டார்கள். இதனால் ஆசிரியர் ஒவ்வொரு நாளும் மாணவிகளை தனியாக அழைத்து
சீரழித்து வந்துள்ளார்.

சென்னை: மாணவிகள் என் மீது பள்ளி நிர்வாகத்திடம் பாலியல் புகார் அளித்த போது, அதை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. அந்த தைரியத்தில் தான் மாணவிகளிடம் தொடர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், தன்னை போன்று பல ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளார். பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் புகைப்படத்துடன் பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் டிவிட்டரில் வெளியிட்டனர். இது வைரலாக பரவி தமிழகம் இன்றி நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிகளின் பாலியல் விவகாரம் பெரிய அளவில் உருவெடுத்ததால் மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி தி.நகர் துணை கமிஷனர் அரிகிரன் பிரசாத், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி நேரடியாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. அதைதொடர்ந்து அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆசிரியர் ராஜகோபாலனிடம் கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப்பை போலீசார் ஆய்வு செய்த போது, லேப்டாப்பில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து வரும் சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் பிள்ளைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தது.  ஆசிரியர் ராஜகோபாலன் லேப்டாப்பில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காவல் துறைக்கு பத்மா சேஷாத்திரி பள்ளியில் தற்போது படித்து வரும் மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் அளித்த புகாரை காண்பித்து நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது ஆசிரியர் ராஜகோபாலன் அளிக்கும் பதிலை போலீசார் வீடியோ பதிவுடன் வாக்குமூலமாக பதிவு செய்து வருகின்றனர்.
 
ஆசிரியர் ராஜகோபாலனிடம் இரண்டாவது நாளாக நேற்று விடிய விடிய நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: ‘‘பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பெண்கள் விஷயங்களில் சற்று வீக்கானவர். பத்மா சேஷாத்திரி பள்ளியில் அவர் பணிக்கு சேர்ந்த போதே அவர் மீது சக ஆசிரியைகள் பள்ளி நிர்வாகத்திடம் பாலியல் குற்றச்சாட்டு அளித்துள்ளனர். அப்போது பள்ளி நிர்வாகம் ராஜகோபாலன் நேரில் அழைத்து கண்டித்துள்ளனர். அவரிடம் மன்னிப்பு கடிதமும் எழுதி வாங்கி உள்ளனர். அதன் பிறகு அவர் பள்ளியில் ஒழுக்கமான ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவர் எடுக்கும் பாட பிரிவில் படிக்கும் மாணவ மற்றும் மாணவிகள் அதிகளவில் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகத்திற்கு நம்பிக்கையான ஆசிரியராக ராஜகோபாலன் விளங்கியுள்ளார். பல முறை அவர் பள்ளி நிர்வாகம் சார்பில் நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ளார்.

இதனால் பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகிகளிடம் இவர் நெருங்கி பழகி வந்துள்ளார். அதேநேரம் பள்ளியின் வளர்ச்சிக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் ராஜகோபாலன் கடுமையாக உழைத்துள்ளதால் பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் போன்று அதிகாரம் பள்ளி அறக்கட்டளை சார்பில் அவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராஜகோபாலனுக்கு திருமணம் நடந்து மனைவி உள்ளார். ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. அதேநேரம் ராஜகோபாலன் பெண்கள் விஷயத்தில் பலவீனமானவர் என்பதால் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் அவரது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததால் அவர்களுக்குள் தாம்பத்திய உறவு இல்லாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.

பள்ளியில் நல்ல ஆசிரியர் என்று பெயர் எடுத்த பிறகு, பிற்காலத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் தனது சுய நலத்திற்கு மாணவிகளை பயன்படுத்தி கொண்டுள்ளார். அவர் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகிறார். மற்ற பள்ளிகளை விட தங்களது பள்ளி அதிக மதிப்பெண்கள் உடன் தேர்ச்சி பெற வேண்டும் என்பதால் தினமும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு வகுப்பு நடத்தும் போது தான் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ய தொடங்கியுள்ளார். பாடப்பிரிவில் சரியாக படிக்காத மாணவிகளை குறிவைத்து அவர்களிடம் பொதுத்தேர்வின் போது நீங்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க நான் உதவி செய்கிறேன் என்று கூறி உடலில் பல இடங்களில் கைகளை வைத்து தனது பாலியல் அத்துமீறல்களை அரங்கேற்றி வந்துள்ளார். சில மாணவிகள் ஆசிரியரின் பாலியல் தொந்தரவை வெளியில் சொல்ல முடியாமல் இருந்து வந்துள்ளனர். ஒரு சில மாணவிகள் ஆசிரியரின் செயலை கண்டித்து ராஜகோபாலனை கன்னத்தில் அறைந்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

ராஜகோபாலன் செயலை கண்டித்த மாணவிகள் தான் பள்ளி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர்.  ஆனால் ஆசிரியர் ராஜகோபாலன் சரியாக படிக்காததால் நான் தனது கையால் அடித்தேன். அதை தான் அவர்கள் நான் தவறாக நடந்து கொண்டதாக உங்களிடம் கூறுகிறார்கள், நீங்கள் வேண்டும் என்றால் அந்த மாணவியுடன் படிக்கும் சக மாணவிகளிடம் கேட்டு பாருங்கள் என்று முதல்வரிடம் கூறி தப்பித்து வந்துள்ளார். அவர்களும் ராஜகோபாலன் பேச்சை கேட்டு மாணவிகள் மீதும் மட்டும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வந்துள்ளனர். இதனால், ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் வேறு வழியின்றி ராஜகோபாலனின் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு ராஜகோபாலன் தினமும் காலை 7 மணிக்கு வருவார். பள்ளி முடிந்த பிறகு இரவு 7 மணிக்கு மேல் தான் வீட்டிற்கு செல்வார்.

பள்ளியில் ஆசிரியர் மீது பாலியல் புகார்கூறிய மாணவிகள் யாரும்  பெற்றோரிடம் புகார் அளிக்க வில்லை. இதனால் ராஜகோபாலன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி புகார் அளித்த மாணவிகளை சிறப்பு வகுப்பின் போது உன்னை இந்த பள்ளியில் இருந்து வெளியேற்றிவிடுவேன் என்று மிரட்டி பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார். பிரச்னைக்குள்ளான மாணவிகளை மட்டும் முதலில் பாலியல் தொந்தரவின் போது புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வார். அந்த புகைப்படத்தை வைத்து அந்த மாணவிகள் வேறு யாரிடமும் புகார் அளிக்காத படி மிரட்டி வந்துள்ளார். இதுபோல் கடந்த 10 ஆண்டுகளாக  ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மாணவிகளை மட்டும் இவர் பாலியல் தொந்தரவு கொடுக்க வில்லை. பள்ளியில் இளம் ஆசிரியைகளுக்கும் அவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மாணவிகளிடம் தொடர் பாலியல் அத்துமீறல்கள் குறித்து அடிக்கடி பள்ளி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகார்களை அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளி ஆசிரியைகளிடம் கூறி அழுதுள்ளனர்.

அவர்கள் இந்த விவகாரத்தை பள்ளியின் அறக்கட்டளை நிர்வாக ழுழு உறுப்பினர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, மாணவிகளே இந்த பிரச்னையை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை, நீங்கள் ஏன் இந்த விவகாரத்தை பெரிதாக எடுத்து கொள்கிறீர்கள் என்று கூறி, இதுபோன்ற சம்பவங்கள் வெளியில் தெரிந்தால் நமது பள்ளியின் பெயர் தான் கெட்டுவிடும், எனவே பள்ளி வளாகத்திற்குள் எது நடந்தாலும் அதை நீங்கள் வெளியில் சொல்ல கூடாது, அப்படி வெளியில் தெரிந்தால் உங்களை பள்ளியில் இருந்து நீக்கி விடுவோம் என்று மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியைகளை மிரட்டியுள்ளனர். இதனால் ஆசிரியைகளும் மாணவிகளுக்கு உதவ முடியாத நிலை ஏற்பட்டது.
கொரோனா ஊரடங்கின் போது பள்ளி மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. அப்படி சிறப்பு வகுப்புகள் நடத்தும் போது மாணவிகள் பள்ளி சீருடையில் வராமல் அவர்கள் விருப்பமான ஆடைகளை அணிந்து வர பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளனர்.

அப்படி தினமும் புதிய ஆடைகள் அணிந்து வரும் மாணவிகளை ஆசிரியர் ராஜகோபாலன் உனக்கு இந்த ஆடை நன்றாக இருக்கிறது என்று கூறி ஓய்வு அறைக்கு தனியாக அழைத்து சென்று மேலே கைகளை வைத்து மாணவிகளுக்கு பாலியல் உணர்வுகளை தூண்டி தன்வயப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். கொரோனா காலம் என்பதால் பள்ளியில் யாரும் இருக்க மாட்டார்கள். செக்யூரிட்டிகள் மட்டும் தான் இருப்பார்கள். அவர்களும் வகுப்பு அறை பக்கம் வர மாட்டார்கள். இதனால் ஆசிரியர் ஒவ்வொரு நாளும் மாணவிகளை தனியாக அழைத்து சீரழித்து வந்துள்ளார். அப்போது தனது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார். அந்த வீடியோக்களை நண்பர்களான சக ஆசிரியர்களுக்கு அனுப்பி அவர்களையும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ய அனுமதி கொடுத்துள்ளார். அந்த வகையில் கடந்த ஒன்றறை ஆண்டுகளாக தான் ஆசிரியர் ராஜகோபாலனின் மாணவிகளுக்கு அதிகளவில் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது”. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.



Tags : Padma Seshadri ,Rajagopalan , Padma Seshadri school does not take action against me for complaining: I continued to sexually harass students with the courage given by the administration: School teacher Rajagopalan
× RELATED நடைபயிற்சி செய்தவரிடம் இளம்பெண்ணுடன்...